சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த தேர்தலை நடத்தக்கூடாது என்று தடை எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து எம்எல்ஏ போஸ் எதிர்மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தார். இதற்கிடையே ஏ.கே.போஸ் காலமானார். இந்நிலையில் நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.