கிருஷ்ணகிரி தொகுதியை தங்களுக்கு கேட்டு பாமக, தேமுதிக நெருக்கடி கொடுத்துவருவது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்ற போட்டி எழுந்துள்ளது. பக்கத்து தொகுதியான தர்மபுரியில் பாமக போட்டியிடுவது உறுதியாகி விட்ட நிலையில், கிருஷ்ணகிரி தொகுதியையும் கைப்பற்ற பாமக முடிவு செய்து, காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில், கிருஷ்ணகிரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அதிமுக தலைமையிடத்தில், தேமுதிக தவம் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிமுக கோட்டையாக உள்ள கிருஷ்ணகிரி தொகுதியை, மீண்டும் அதிமுகவிற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி, அதிமுக வசமானால் சிட்டிங் எம்.பி. அசோக்குமாருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், கட்சி தொண்டர்கள் உள்ளனர். இதனால், தொகுதி பங்கீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.