சென்னை: ஓட்டுரிமை துப்பாக்கி தோட்டாவை விட மிகவும் சக்தி வாய்ந்தது என ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான காப்பக திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான காப்பகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த காப்பகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்து பேசியதாவது: புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தொழில்முனைவோர்களை உருவாக்கி, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இன்னும் சில வருடங்களில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3வது இடத்தை அடையும். கல்வி, வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல, அறிவு மற்றும் திறமையை வளர்த்துக்கொண்டு, புதிய தொழில் முனைவோராக வர பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், எந்த ஒரு அரசாங்கமானது 100% வேலைவாய்ப்புக்கு உத்திரவாதத்தை அளிக்காது.
கல்வியின் துணை கொண்டு புதிய தொழில் நுட்பத்தை அறிந்து தொழில் முனைவோராக வளர்ந்து, அதன் மூலம் மட்டுமே புதிய பொருளாதார வளர்ச்சியடைய முடியும். உங்களது ஓட்டு தான் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.