சென்னை: சைதாப்பேட்டை அரசு விடுதியில் போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 4 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் எம்சி.ராஜா அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சில மாணவர்கள் மது போதையில் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை சக மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்டுள்ளனர். இதனால் போதை மாணவர்களுக்கும், தட்டிக்கேட்ட மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போதை மாணவர்கள் எதிர்தரப்பு மாணவர்களை ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.