சென்னை: முதல்வழித்தட திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 சுரங்கவழித்தட மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பசுமையான சுரங்கவழித்தட கட்டிட அமைப்பிற்கான விருது வழங்கப்பட்டது. சென்னையில் முதல்வழித்தட திட்டத்தின் கீழ் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதேபோல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மேம்பட்ட பசுமை சேவை என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சேமிக்க சோலார் தகடு அமைத்து வருகிறது. இந்நிலையில், சுரங்கவழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் சார்பில் சுரங்கவழித்தடத்தில் பசுமையான மெட்ரோ ரயில் கட்டிட அமைப்பிற்கான விருது நேற்று வழங்கப்பட்டது. இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தலைவர் சி.என்.ராகவேந்திரன் விருதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சாலுக்கு வழங்கினார்.