பூந்தமல்லி: சென்னை மதுரவாயலில் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்திய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மதுரவாயல், கணபதி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இடத்தில் மதுக்கடை திறக்கக்கூடாது என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.ஆனால் மதுக்கடையை திறப்பதற்கான பணிகளில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று பிற்பகலில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 60க்கும் மேற்பட்டோர் அந்த கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து மதுரவாயல் உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் கலைந்து செல்ல மறுத்ததால் பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இப்போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியபோது ஒரு பெண்ணின் மகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.