புவனகிரி: புவனகிரி அருகே அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் புவனகிரி அடுத்த மேலகீரப்பாளையம் என்ற இடத்தின் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் பின் பக்கத்தில் உள்ள ஒரு சக்கரம் தனியே கழன்று பஸ்சுக்கு முன்புறம் வேகமாக ஓடியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். கழன்று வேகமாக ஓடிய சக்கரம் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சென்று அங்கு இருந்த எத்திராஜ் என்பவரது வீட்டின் வேலி மீது மோதியது. அப்படியும் சக்கரம் நிற்காமல் வேகமாக அருகில் இருந்த அந்த வீட்டின் கழிப்பறை கதவை உடைத்துக்கொண்டு, கழிப்பறையின் மேற்கூரை சிமெண்ட் ஷீட்டை உடைத்துக் கொண்டு மேலே ஏறி சொருகிக் கொண்டது.