நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் பற்றி எரிந்து வந்த காட்டுத்தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு விட்டதாக மாவட்ட வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் பற்றிய காட்டுத்தீ, நீலகிரி முதுமலை புலிகள் சரணாலய பகுதிக்கும் பரவியது. அத்துடன் கேரள மாநில வனப்பகுதியான முத்தங்கா சரணாலயத்திற்கும் காட்டுத் தீ பரவியது. தீயை கட்டுப்படு்த்தும் பணியில் 3 மாநில வனத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மசினகுடி வனச்சரகம் மன்றாடியார் வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் புற்கள், செடி, கொடிகள் தீயில் கருகின. இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வனப்பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் தூர சாலை ஒரத்தில் புல்வெளிகளில் எதிர் தீ வைக்கப்பட்டு காட்டு தீ வேறு பகுதிக்கு பரவாமல் கட்டுபடுத்தப்பட்டது.