புதுடெல்லி: வராக்கடன் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மோசமான இடத்திலேயே உள்ளது. பெரிய அளவில் முன்னேற்றம் காணவில்லை என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. வராக்கடன் காரணமாக வங்கிகளின் நிதி நிலை படு மோசமாக உள்ளது. வராக்கடன் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டவை பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகள்தான். இதனால் ஏற்பட்ட நிதி தள்ளாட்டத்தில் இருந்து வங்கிகளை மீட்க மத்திய அரசு மூலதன நிதி வழங்கி வருகிறது. இந்த நிலையில் வராக்கடனில் மோசமாக உள்ள நாடுகளை வரிசைப்படுத்தி சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 137 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வராக்கடனில் மிக மிக மோசமான நாடு என முதல் இடத்தை பிடித்தது உக்ரைன். இதன் வராக்கடன் விகிதம் 54.3 சதவீதம். இதற்கு அடுத்த இடங்களில் சான் மரினோ (ஐரோப்பா கண்டத்தில் உள்ள சிறிய நாடு) (47.2), கிரீஸ் (44.1), சிப்ரஸ் (36.4), கினியா (30.8) உள்ளன.
குறைந்த வராக்கடன் விகிதம் உள்ள நாடுகளில் கனடா (0.4 சதவீதம்), கொரியா (0.5), சுவிட்சர்லாந்து (0.6), அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லக்சம்பர்க் (0.9) என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.