ஸ்ரீநகர்: காயம் அடைந்து வீட்டில் இருந்த படைத்தளபதி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு விடுமுறையை ரத்து செய்து விட்டு சென்று தலைமை தாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் தீவிரவாதிகள் மீது கடும் கோபத்தில் உள்ள பாதுகாப்பு படைகள், அவர்களை வேட்டையாடி வருகின்றன. நேற்று முன்தினம் காலை புல்வாமாவில் தீவிரவாதிகள் பதுங்கிருப்பதாக தகவல் கிடைத்ததும், ராணுவம் அப்பகுதியை சுற்றிவளைத்தது. அப்போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிரிகேடியர் ஹர்பீர் சிங் காயமடைந்தார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். அதேபோல், டிஐஜி அமித் குமாரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.