பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி, ஆழியாற்றங்கரையோரம் நள்ளிரவில் நடந்த மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை மறுநாள் (20ம் தேதி) பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மயான பூஜை நேற்று நள்ளிரவு ஆழியாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் நடந்தது. ஆழியாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த எரிமேடையில், மாசாணியம்மன் உருவாரம் மண்ணால் அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் அம்மன் அருளாளி மற்றும் பக்தர்கள் பலர் ஆழியாற்றில் நீராடி, கோயிலுக்கு சென்றனர். பின் மாசாணியம்மனுக்கு 12.30 மணியளவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. சுமார் 1.30 மணியளவில் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் பொறிக்கப்பட்டிருந்த அம்மன் உருவாரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அம்மா தாயே. மாசாணி தாயே’ என்று சரணகோஷம் எழுப்பினர்.