சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு ஆட்சேபனை மனுக்கள் வழங்கிய விவசாயிகளிடம் நேற்று தனி டிஆர்ஓ வெற்றிவேல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆத்திரை உலகம்பட்டு, கொலக்கரவாடி உட்பட 12 கிராமங்களை சேர்ந்த 74 பேருக்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விவசாயிகள் நேரில் தங்களுடைய விருப்பத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் 5 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் 5 பெண்கள் உட்பட 27 பேர், 8 வழிச்சாலைக்கு நிலம் தரமாட்டோம் என்றுக்கூறி கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டவாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.