புதுடெல்லி: பாலியல் வழக்கில் நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்த போலீசார் மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின்போது கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 10 மாதங்களாக சிறையில் உள்ளனர். வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் முருகன் தரப்பில் ஜாமீ கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என தமிழக போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி கடந்த டிசம்பர் 4ம் தேதி உத்தரவிட்டிருந்தது.