திருவொற்றியூர்: மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹40 லட்சம் செலவில் நவீன ஆய்வுக்கூடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2,700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் போதுமான வசதி இல்லாததால், நவீன ஆய்வுக்கூடம் கட்டி தர வேண்டும் என்று பெற்றோர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்பாபு மற்றும் மணலி சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது பள்ளியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நவீன ஆய்வுக்கூடம் அமைப்பது குறித்து கோரிக்கை விடுத்தனர்.