வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் கத்தரி உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடமலை - மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே போதிய மழை இல்லாமல் கிணற்று நீர்பாசனமும், ஆழ்துளைகிணற்று நீர்பாசனமும் வற்றி விட்டது. இதனால் விவசாயத்திற்கு போதிய நீர் இல்லாமல் மானாவாரி நிலங்களாக கடமலை மயிலை ஒன்றியம் மாறிவருவதால் விவசாயிகள் கதறி வருகின்றனர்.