கரூர்: முதல்வர் பழனிசாமி சொல்வதைதான் தம்பிதுரை பேசி வருகிறார் என்று டிடிவி. தினகரன் கூறினார்.கரூரில், அமமுக மாவட்ட கட்சி அலுவலகத்தை கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக தேறாத கட்சி. அதோடு நாங்கள் போய் சேரமாட்டோம். அவர்களுடன் சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது. அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கின்ற கப்பல். ஆட்சி அதிகாரம் இருப்பதால் அது தெரியவில்லை. தம்பிதுரை பேச்சுக்களை பார்த்தபோது நான் முதலில் எடப்பாடிக்கு தொந்தரவு கொடுக்கத்தான் பேசுகிறார் என நினைத்தேன். இப்போது வரும் தகவல்களை பார்த்தால் இரண்டு பேரும் சேர்ந்துதான் இப்படி செய்கிறார்கள். ஒரு மாதத்தை இப்படியே ஓட்டிவிட்டால் அதன்பிறகு எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவிடும். அதன்பிறகு மத்திய அரசால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்பதாக ஒரு தகவல் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வதைதான் தம்பிதுரை பேசி வருகிறார். ஏதோ நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எதற்காக இந்த நாடகம் என்று தெரியவில்லை.