தேவகோட்டை: தேவகோட்டை அரசு கால்நடை மருத்துவமனையில் கோழிகளுக்கு சிகிச்சை பெறச் சென்றவரை உதாசீனம் செய்ததோடு, அலுவலக அறையில் மது அருந்தி கும்மாளம் போட்ட ஊழியர்களின் அலட்சியத்தால் கோழிகள் இறந்தது. இதுகுறித்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேவகோட்டை மல்லிகை நகரில் வசித்து வருபவர் கஸ்பார். இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் கோழி மற்றும் சேவல்களுக்கு நோய் தாக்கியதால் தேவகோட்டை கால்நடை மருத்துவமனைக்கு நேற்று மதியம் 3 மணி அளவில் ஊசி போடச் சென்றார். அப்போது மருத்துவமனையில் ஊசி போடும் அறையில் மூன்று பேர் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர்.
கஸ்பார் கோழிக்கு ஊசி போட வேண்டும் என கூறியபோது, அதற்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மறுத்துள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து மூன்று பேரில் ஒருவர் கோழிகளுக்கு ஊசி போட்டார். ஊசி போட்ட மறு நிமிடமே கோழியும், சேவலும் இறந்து போனது. கோழிகள் இறந்த சோகத்தில் இருந்த கஸ்பார் இறந்த கோழிகளை அரசு கால்நடை மருத்துவமனையிலேயே போட்டுவிட்டு தேவகோட்டை சப் கலெக்டரிடமும், தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கஸ்பார் கூறுகையில், நான் பாதிக்கப்பட்டது போல் பொதுமக்கள் வேறு யாரும் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி