சென்னையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

சென்னை: 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது. இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. தமிழகத்தில் 2015ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதையடுத்து, 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும், நாளையும் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது.  இந்த மாநாட்டையும், கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர்  எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர்  ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ  தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. நாளை மாலை 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறும்.  சென்னையில் இரண்டு நாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க இந்திய தொழிலதிபர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். மேலும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி சென்னை முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழிற்கொள்கைகளை விளக்கும் வகையில் சென்னையின் முக்கிய சாலைகளில் விளம்பரம் மற்றும் வீடியோ காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: