ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 12ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறை பிடித்தனர்.இதே நாளில் கடற்படை கப்பல் மோதியதில் கடலில் மூழ்கிய படகில் இருந்த 8 மீனவர்களையும் சிறை பிடித்தனர். கைதான 19 தமிழக மீனவர்கள் இலங்கை கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் இவர்களில் 11 மீனவர்களை மட்டும் நேற்று இலங்கை போலீசார் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி, மீண்டும் சிறை பிடிக்கப்பட்டால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்து அவர்களை விடுவித்தார்.