குட்கா விற்பனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் : சிபிஐ விசாரணையில் புதிய ஆதாரம் சிக்கியது

சென்னை,: குட்கா விவகாரத்தில் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய ஆதாரத்தை தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அனுப்பியதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது சிக்கியுள்ளன. இதனால் விரைவில் உயர் அதிகாரிகளுக்குசம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.குட்கா விற்பனையை தங்கு தடையின்றி செய்வதற்காக அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்னையைச் சேர்ந்த குட்கா தயாரிப்பாளர்கள் ரூ.40 கோடிக்கு மேல், லஞ்சம் கொடுத்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

குட்கா தயாரிப்பாளர்களின் வீட்டில் கடந்த 2016 ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய டைரி மூலம் இந்த தகவல் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் 2016 ஆகஸ்ட் மாதம், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் ரகசிய கடிதம் அனுப்பினார்கள்.

தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் “குட்கா விற்பனைக்காக அமைச்சருக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும்” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர்.அதுபோல, 2016 ஆகஸ்டு 11ம் தேதி போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதப்பட்ட கடிதத்தில், “குட்கா விற்க லஞ்சம் வாங்கிய இரு போலீஸ் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மீண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி வருமான வரித்துறை சார்பில் டி.ஜி.பி.க்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “தமிழகத்தில் நாங்கள் சோதனை நடத்த குறிப்பிட்ட இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டதும், உடனடியாக அந்த தகவலை போலீசார் அந்தந்த தொழிலதிபர்களிடம் சொல்லி விடுகிறார்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இத்தகைய கடிதங்கள் எதுவும் வரவில்லை என்று கோர்ட்டில் தமிழக அரசு கூறியது. இதையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்களை கண்டுபிடிக்க கோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி.ஜி.பி. அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆவணம் அனுப்பிய வருமான வரித்துறையின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் பெற்றுள்ளார். அதுபோல டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை டி.ஜி.பி. அலுவலக முகாம் சூப்பிரண்டு ஒருவர் பெற்றுள்ளார். வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள், ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. இந்த புதிய ஆதாரம் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடியை மேலும் இறுக செய்துள்ளது.

சிபிஐ அதிகாரிகள் மாற்றம்:

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் சிபிஐ  பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக பணியாற்றிவர் துரை குமார். இவர் தலைமை அலுவலகம் மற்றும்  ஊழல் தடுப்பு பிரிவை கூடுதலாகவும் கவனித்து வந்தார். இந்நிலையில் இவர் தலைமையிடம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்பியாக மாற்ப்பட்டுள்ளார். சென்னையில் சிபிஐ தலைமை அலுவலகம் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவு எஸ்.பியாக பணியாற்றி வந்த சரவணன், மும்பை பிஎஸ்எப்பிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவில் துணை எஸ்.பி.யாக பணியாற்றிய ஆசேஷ் குமார், சிபிஐ தலைமை அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு துணை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவில் மற்றொரு துணை எஸ்.பி.யாக பணியாற்றிய ஏ.கே.ஜா, தலைமையிடம் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவு துணை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் நாடு முழுவதும் பல இடங்களில் பணியாற்றும் எஸ்.பி.க்கள் மற்றும் துணை எஸ்.பிக்கள் 20 பேர் நேற்று மாற்றம் செய்யப்பட்டனர். சிபிஐயின்  சென்னை மண்டல பொறுப்பாளர் இசாஸ் சலீம் கான், போபால் மண்டலத்துக்கு  மாற்றப்பட்டுள்ளார். இவர், டெல்லி தலைமை அலுவலகத்தில் இருந்து போபால்  மண்டலத்தை கவனிப்பார். போபால் மண்டல பொறுப்பாளராக இருந்த பட்டா சீனிவாச  ராவ், சென்னை மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று சிபிஐ தலைமை அலுவலகம்  தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: