திருப்பரங்குன்றம்: அரசு வழங்கிய பஸ் பாஸ் செல்லாது என கூறி கல்லூரி மாணவியை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்ட சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை, திருப்பரங்குன்றம் அருகே புளியங்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் மகாலட்சுமி, மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு பிபிஏ படித்து வருகிறார். இவர் ஜன. 18ம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்ப திருமங்கலம் சென்ற அரசு பஸ்சில் கோரிப்பாளையம் நிறுத்தத்தில் ஏறி உள்ளார். மாணவியிடம் கண்டக்டர் டிக்கெட் வாங்கும்படி கூறியுள்ளார். மாணவி, பஸ் பாஸை காண்பித்துள்ளார். ‘அரசு வழங்கிய பஸ் பாஸ் எல்லாம் இப்போது செல்லாது’ என கண்டக்டர் கூறியுள்ளார். ‘நான் அரசு கல்லூரியில் படிக்கிறேன்’ என கூறி அடையாள அட்டை மற்றும் பாஸ் ஆகியவற்றை கண்டக்டரிடம் மாணவி காண்பித்துள்ளார். ஆனால், அதை காதில் வாங்காமல், மாணவியை திட்டி அவரை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து, மாணவி நீண்டநேரம் காத்திருந்து வேறு பஸ் பிடித்து மிகத் தாமதமாக வீடு திரும்பினார்.பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோருடன் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அலுவலர் சுந்தரபாண்டியிடம் முறையிட்டுள்ளார். அவரும் மாணவியை திட்டி, உசிலம்பட்டிக்கு சென்று முறையிடுமாறு அலட்சியமாக பதிலளித்தாராம்.