திருவொற்றியூர்: மாதவரம் தோட்டக்கலை பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மாதவரம் பால்பண்ணையில், தமிழ்நாடு தோட்டக்கலை சார்பில் பூங்கா அமைக்க கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பயன்பெறும் வகையில் நடைபயிற்சி தளம், பூச்செடிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு பூங்காவில் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த தோட்டக்கலை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் மாணவர்களின் நாட்டியக் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி தெருக்கூத்து பாட்டு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.