குளித்தலை : குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.21ம் தேதி (திங்கள்) மாலை நடைபெறுகிறது. இவ்விழாவினையொட்டி கடம்பவனேசுவரர் கோயில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில், பேட்டவாய்த்தலை மத்யார்சுனேசுவரர் கோயில், ராஜேந்திரம் மத்யார்சுனேசுவரர் கோயில், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில், முசிறி சந்திரமவுலீசுவரர் திருக்கோயில், வௌ்ளூர் திருக்காமேசுவரர் கோயில் ஆகிய 8 ஊர் கோவில்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகள் மற்றும் அம்பாள் காவிரியில் எழுந்தருளி தம்மை நாடி நலம் வேண்டும் அன்பர்களின் இடர்போக்கி அருள் வழங்கும் தைப்பூச பெருந்திருவிழா வரும் 21ம் தேதி (திங்கள்) மாலை 4 மணிக்கு மேல் சாமி சந்திப்பு மற்றும் 5.30 மணிக்கு மேல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஜன.22ம் தேதி காலை 10 மணிக்கு சந்திப்பு, தீபாராதனை மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவை காண சுற்று வட்டாரத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டி.எஸ்.பி சுகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். விழா ஏற்பாட்டுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி