சென்னை: விழுப்புரம், திருவண்ணாமலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும், தொண்டர்களிடமிருந்து மனுக்களை பெற அமைச்சர் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: தொண்டர்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து தெரிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கே.பி. முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகிய 5 பேர் குழு அமைக்கப்படுகிறது. அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம், சேவூர் இராமச்சந்திரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் க.பொன்னுசாமி. விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் டாக்டர் சு.லட்சுமணன் ஆகியோரும் தங்களின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புச் செயலாளராக டாக்டர் சு.லட்சுமணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளராக பேராசிரியர் க.பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக சி.வி.சண்முகம் ஆகியோர் புதிய பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள்.