சென்னை: தன் மீது புகார் அளித்தவர்களுக்கும், புகாரை வாங்கியவர்களுக்கும் சட்டம் ெதாடர்பான அறிவு இல்லை என்று ஐஜி பொன்.மாணிக்கவேல் அதிரடி பேட்டியளித்தார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறியதாவது: பொய் வழக்கு போடச் சொன்னதாக புகார் அளித்துள்ளார்கள். குறிப்பிட்ட 21 பேரும் இதுவரை ஒரு எப்ஐஆர் கூட போடவில்லை. ஒருவரை கூட கைது செய்யவில்லை. அவர்கள் நல்லவர்கள் தான், அவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு என்பது ஒரு சிறப்பு பிரிவு. குற்றப்பிரிவு, இதர பிரிவுகள் போல், ஒரு காவலர் அல்லது முதல்நிலை காவலர் எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது. அயல்பணியில் வந்த எஸ்ஐகளும் எப்ஐஆர் போட முடியாது, கைது செய்ய முடியாது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் 208 போலீசார் மட்டுமே உள்ளனர். அதில் 10 டிஎஸ்பிகள், 9 ஏடிஎஸ்பி பணியில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 5 டிஎஸ்பிகள், 5 ஏடிஎஸ்பிக்கள் தான் பணியில் உள்ளனர். 17 இன்ஸ்பெக்டர்கள், 47 எஸ்ஐகள், இதர போலீசார் பிற பதவிகளில் உள்ளவர்கள். இந்த போலீஸ் படையை வைத்து நான் ஒரு சிலையை கூட பிடிக்கவில்லை. நான் பிடித்த 19 சிலைகளில், 17 சிலைகள் அந்தந்த மாவட்ட எஸ்பிகளால் வழங்கப்பட்ட 4 ஆயுதப்படை காவலர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது. சில சமயங்களில் இன்ஸ்பெக்டர்களை உதவிக்கு அழைத்துள்ளேன். அவர்கள் உதவியுடனே 47 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அதற்கு மாவட்ட எஸ்பிகள், போலீசார், ஆயுதப்படை காவலர்கள் தான் காரணம்.