சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்ச வழக்கு இடைத்தரகருக்கு ஜாமீன்

புதுடெல்லி :சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத்துக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உபி.யை சேர்ந்த பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேசியை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ₹3 கோடி லஞ்சம்  பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், அஸ்தானா லஞ்சம் பெறுவதற்கு தரகராக செயல்பட்டதாக மனோஜ் பிரசாத், சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர் குமார், மற்றொரு தரகர் சோமேஷ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 17ம் தேதி கைது செய்யப்பட்ட மனோஜ் பிரசாத், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  அவருடைய ஜாமீன் மனுவை கடந்த நவம்பர் 3ம் தேதி நீதிமன்றம் நிராகரித்தது. அதே நேரத்தில், இந்த வழக்கில் தொடர்புடைய சிபிஐ டிஎஸ்பி தேவேந்தர் குமாருக்கு கடந்த அக்டோபர் 31ம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பிாசாத் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த புதிய மனு சிபிஐ சிறப்பு நீதிபதி சந்தோஷ் ஸ்நேகி மான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அவர் வழங்கிய உத்தரவில்,` பிரசாத்தை தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்க வேண்டிய நிலை இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: