சென்னை: தமிழ்நாடு மற்றும் அந்தமான் கல்வித்துறை இடையே கல்விச் சேவைகளை பகிர்ந்து கொள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கல்வித் துறை ஆகியவற்றிற்கு இடையில் கல்விச் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு, கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை அளிக்கும். மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாணவர்களுக்கு குறைதீர் பயிற்சி அளிக்க உதவுதல், பாடநூல்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக தக்க ஆதரவு அளிக்கப்படும்.