கும்பகோணம்: எங்கள் சொத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது என்று காடுவெட்டி குருவின் மனைவியும்,எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து என்று காடுவெட்டி குருவின் மருமகனும் தெரிவித்துள்ளனர். வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை (20), குருவின் தங்கை சந்திரகலா மகன் மனோஜ்கிரண் (27) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காதல் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். உறவினர்கள் வீட்டில் இருக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டதால் அவர்கள் குருவின் மற்றொரு தங்கை வீட்டில் தங்கியுள்ளனர். இதுகுறித்து, விருத்தாம்பிகை கூறும்போது, `எனது தந்தை விருப்பப்படிதான் இந்த திருமணம் நடைபெற்றது. இது எனது அம்மாவுக்கு தெரியும்’ என்றார். மனோஜ்கிரண் கூறுகையில், `நான் பிறந்தது முதல் மாமா குருவோடுதான் அதிகம் இருந்தேன். தற்போது ஐஏஎஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் சிறு வயதிலிருந்து விரும்பினோம். அதனால் திருமணம் செய்து கொண்டோம்.