தமாகா நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: ஒகேனக்கல்லில் அதிகாலையில் பரபரப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் இன்று அதிகாலை பால் விற்பனைக்கு சென்ற தமாகா பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை நாடார்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (52). இவர் பென்னாகரம் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவராக உள்ளார்.. விவசாயியான இவர், வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் அதிகாலையில் வீடுகளுக்கு சென்று பால் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு, ஒகேனக்கல் பகுதியில் பால் விற்பனை செய்வதற்காக டூவீலரில் கணேஷ் சென்றுள்ளார். விற்பனையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். ஒகேனக்கல் பழைய தபால் நிலையம் பகுதியில் வந்தபோது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் கணேசை வழிமறித்து நிறுத்தினர். அவர்களின் கையில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதை பார்த்த கணேஷ் டூவீலரை போட்டு விட்டு அவர்களிடம் இருந்து தப்பியோடினார். அவரை விடாமல் துரத்திச் சென்ற மர்மநபர்கள், கணேஷின் முகத்தில் அரிவாளால் கொடூரமாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கணேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஊருக்கு நடுவே அதிகாலையில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் ஒகேனக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்தும், அவரை கொலை செய்த மர்மநபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒகேனக்கல், பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம் வனப்பகுதி மற்றும் காவிரிகரையோரங்களில் மணல் அதிகமாக உள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதிகளில அஞ்செட்டி, பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த மணல் கொள்ளையர்கள் லாரி, டிராக்டர், கழுதைகளில் மணல் திருடி வருகின்றனர். இதுபற்றி கணேஷ் போலீசுக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் தான் மணல் கொள்ளையர்கள் திட்டமிட்டு இன்று அதிகாலை கணேஷை வெட்டிக்கொலை செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: