திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய கேரள மாடல் அழகி ரஹ்னா பாத்திமா மத உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். சபரிமலையில் இளம்பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கொச்சியை சேர்ந்த மாடல் அழகியும், பிஎஸ்என்எல் ஊழியருமான ரஹ்னா பாத்திமா கடந்த மாதம் சபரிமலை செல்வதற்காக வந்தார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், இதுகுறித்து அறிந்ததும் சபரிமலையில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சன்னிதானத்தில் இளம்பெண்கள் வந்தால் கோயில் நடையை மூடி விடுவேன் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறினார். இதையடுத்து போலீசார் ரஹ்னா பாத்திமாவை திரும்ப அழைத்து சென்றனர். இதற்கிடையே ரஹ்னா பாத்திமா தனது பேஸ்புக்கில் சபரிமலை பக்தர்கள் விரதக் காலத்தில் அணியும் கருப்பு ஆடையும், துளசிமணி மாலையும் அணிந்து உடல் பாகங்கள் தெரியும் விதத்தில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இது மத உணர்வை புண்படுத்துவதால் ரஹ்னா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கூறி பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பாஜ தலைவர் ராதாகிருஷ்ண மேனன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து ரஹ்னா பாத்திமா மீது 295 (ஏ) என்ற ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.