சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நாகப்பட்டினம் அருகில் கஜா புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக உயிர்ச்சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 பேர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.