லண்டன் : ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்திய இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆண்டு இறுதி ஏடிபி தரவரிசையில் டாப் 8 வீரர்கள் மற்றும் ஜோடிகள் மோதிய இந்த தொடர் லண்டன் O2 அரங்கில் நடைபெற்றது. எட்டு வீரர்களும் இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் மோதியதில் முதல் 2 இடங்களைப் பிடித்த வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறினர். முதல் அரை இறுதியில் ஜோகோவிச் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரவ் (3வது ரேங்க்) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில், சீசன் முடிவு சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் ஜோகோவிச் (31 வயது) - ஸ்வெரவ் (21 வயது) மோதினர். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியில், 6வது முறையாக கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்கிய ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஸ்வெரவ், தனது மின்னல் வேக சர்வீஸ்களால் ஜோகோவிச்சை திணறடித்தார்.