சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. அதற்கு தண்ணீர் தருவதாக ஆந்திர அரசு உறுதியளித்துள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய 4 ஏரிகள் விளங்குகிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து தான் சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதுதவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மூலம் தண்ணீரும், மேலும், தெலுங்கு கங்கை திட்டம் மூலம், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. அதன்படி இந்த ஒப்பந்த காலத்தில் 8 டிஎம்சி நீர் தர வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். இதையேற்று, ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. இந்த நிலையில் 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 13 டிஎம்சியாக நீர் இருப்பு குறைந்துள்ளதால் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.