பெங்களூர்: பிளிப்கார்ட்டை எப்போது வால்மார்ட் வாங்கியதோ அப்போதில் இருந்தே அடுத்தடுத்து அதிகாரிகள் மட்டத்தில் ஆட்டம் காணத்துவங்கி விட்டது. பிளிப்கார்ட் துவங்க முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பின்னி பன்சால், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக விலக நேர்ந்தது. எப்போதோ நடந்த ‘பரஸ்பரம் ஒத்துக்கொள்ளப்பட்ட’ விவகாரத்தை தோண்டி எடுத்து பிரச்னையாக்கியதை அடுத்து அவர் தார்மீக அடிப்படையில் விலகினார். அவர் இடத்துக்கு சிக்கல் நேர்ந்த நிலையில், ஏற்கனவே 18 மாதமாக காலியாக இருந்த மனிதவள மேம்பாட்டு தலைமை பதவிக்கு இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்மிருதி சிங். இந்த பதவியில் இருந்த சிஓஓ நிதின் சேத் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென விலகினார். அவர் விலகிய பின்னர், மனிதவள தலைமை பதவியை கூடுதல் பொறுப்பாக சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கவனித்து வந்தார்.