கயானா: மகளிர் உலக கோப்பை டி20 போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதி வருகின்றன. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் 3 ஆட்டங்களிலும் அபாரமாக வென்று தலா 6 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில், இரு அணிகளும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. தனது 3வது போட்டியில் நேற்று முன்தினம் அயர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா 52 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது. அந்த போட்டியில் தொடக்க வீராங்கனைகள் மித்தாலி ராஜ் 51 ரன், ஸ்மிரிதி மந்தனா 33 ரன் விளாச, இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.