நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்த மாணவி அனிதா பெயரில் படம் எடுக்க தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வினால் மருத்துவ கனவு கலைந்து தற்கொலை செய்த மாணவி அனிதாவின் பெயரில் எடுக்கப்படும் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு தடைகோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமம் பெரியார் நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் எஸ்.அனிதா. கடந்த 2017ல் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் மருத்துவ இடங்களுக்கான நீட் தேர்வில் போதிய தகுதி மதிப்பெண்ணை பெற முடியவில்லை. இதனால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா தனது வீட்டில் 2017 செப்டம்பர் 1ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அனிதாவை கவுரவப்படுத்தும் வகையில் அனிதாவின் பிறந்தநாளன்று,   ஆர்.ஜே.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் “டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்.” என்ற படத்தை எடுக்க அறிவித்து போஸ்டர் வெளியிட்டது. அந்த போஸ்டரில், ஸ்டெதஸ்கோப் அணிந்த அனிதா தாமரை மலரில் அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்து.  இந்த படத்தில் அனிதா வேடத்தில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி நடிப்பதாகவும், அஜய் என்கிற அஜய்குமார் படத்தை தயாரித்து இயக்குவதாகவும் முடிவு செய்யப்பட்டு பட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில், தனது மகள் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு படத்தை இயக்குனர் அஜய் என்கிற அஜய்குமாரோ அல்லது அவரை சார்ந்தவர்களோ படம் எடுக்கவோ, விளம்பரப்படுத்தவோ தடை விதிக்க வேண்டுமென அனிதாவின் தந்தை டி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், இயக்குனர் அஜய் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சண்முகம் சார்பில் ஆஜரான வக்கீல், படத்தின் இயக்குநர்  குழுமூர் கிராமத்திற்கு வந்ததே இல்லை. அனிதாவின் வாழ்க்கை பற்றி எந்த குறிப்பும் இல்லாத அவரது பெயரை தவறாக பயன்படுத்தி லாப நோக்கத்துடன் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி, இந்த வழக்கில் படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான அஜய்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: