ஆண்டிபட்டி: மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து கூடுதலாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி 68.44 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1237 கன அடியாக உள்ளது. பெரியாறு பாசன கால்வாய் மூலம் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1680 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையையேற்று வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி இன்று காலை 9.30 மணியளவில் தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் அணையில் இருந்து 3 மாவட்டங்களின் பாசனத்திற்காக கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட்டார்.