தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது பெற 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது பெற 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, சமூக நலம் சத்துணவு திட்டத்துறை மூலம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் விதமாக அதற்கான மாநில விருது வழங்கப்படுகிறது. அதன்படி வருடந்தோறும் சிறப்பாக சேவைபுரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது.   

 

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 10ம் வகுப்பு படிக்கும் ந.நந்தினி என்ற சிறுமிக்கு, அவர் தனக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை துணிச்சலுடன் போராடி நிறுத்தியமைக்காக, கடந்த 24.01.2018 அன்று ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் முதல்வர் வழங்கினார். அதேபோன்று, வருகிற 24 ஜனவரி 2019 - தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு 30.11.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்/ மாவட்ட திட்ட அலுவலர் / காவல்துறை / தொண்டு நிறுவனங்கள் போன்ற  சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்டங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு 24.01.2019 அன்று மாநில விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: