பெரம்பூர்: காசிமேடு சூரியநாராயண தெருவில் உள்ள மயானத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் சமூகவிரோதிகள் கூடாரமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காசிமேடு சூரியநாராயண தெருவில் இந்துக்கள் சுடுகாடு உள்ளது. இங்கு, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதி மக்கள் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி 4 முதல் 5 சடலங்கள் வரை இங்கு அடக்கம் செய்யப்படும் நிலையில், இந்த சுடுகாட்டில் ஒரே ஒரு எரியூட்டும் தகன மேடை மட்டும் உள்ளதால், இறுதிச் சடங்கு மேற்கொள்ள வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, இங்கு கூடுதலாக ஒரு தகன மேடை அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இங்கு அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின் விளக்குகள் பழுதடைந்து எரிவதில்லை.