சென்னை : சென்னை பூவிருந்தவல்லி அருகே குடோனில் பதுக்கப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் குடோனில் பதுக்கப்பட்டிருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாதம் அடையாறில் பிடிபட்ட புருஷோத்தமன் என்பவர் அளித்த தகவலின்படி அடையாறு காவல் துணை ஆணையர் ஷேசாய்சிங் தலைமையிலான போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் குட்காவை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குட்கா விவகாரத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாகவும், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதற்கு அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் துணை போனதாகவும் ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. பூதாகரமாக மாறிவரும் இந்த குட்கா விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டவிரோத குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், குட்கா ஊழல் விவகாரம் வெளிவர அமைந்தது. இதனையடுத்து முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை துவங்கியது. பின்னர் மாதவராரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்பின் மத்தியஅரசு அதிகாரிகள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பூவிருந்தவல்லி அருகே குடோனில் பதுக்கப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி