சென்னை: இயற்கை சீற்றங்களின் காரணமாகவே நீர்த்தேக்க கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை பெருநகர குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய, 1000 மி. கன அடி கொள்ளளவில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணன் கோட்டை கிராமத்தின் அருகே தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய இரண்டு கண்மாய்களை இணைத்து ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைக்க ஜனவரி 2012ல் அரசாணை வெளியிடப்பட்டது. புதிய நீர்த்தேக்க திட்டப்பணி செப்டம்பர் 2013ல் துவங்கப்பட்டு, அதற்கான 1485 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நில உரிமையாளர்கள், புதிய நில எடுப்பு சட்டத்தின்படி கூடுதல் தொகை வழங்க வேண்டி, வழக்கு தொடர்ந்ததால், பணிகள் காலதாமதமானது. இருப்பினும், இன்றைய நிலையில் வழக்குகள் முடிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதம், நீர்தேக்க கட்டுமானப் பணிகள் 65 சதவீதம் முடிந்துள்ளது.