மாசசூசட்ஸ்: செல்போன்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலை கதிரியக்கம் எலிகளுக்கு கேன்சரை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. ஆனால், இது மனிதர்களுக்கு பொருந்தாது என அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. செல்போனில் இருந்து வெளிப்படும் ரேடியோ அலை கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஆய்வு எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் உள்ள தேசிய டாக்சிகாலஜி திட்டத்தின் கீழ் 30 மில்லியன் டாலர் செலவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரேடியோ அலை கதிரியக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட ஆண் எலிகளின் மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பில் கேன்சர் கட்டிகள் ஏற்பட்டன. இந்த அறிக்கையை தொடர்ந்து, ரேடியோ அலை கதிரியக்கமும் மனிதருக்கு கேன்சரை ஏற்படுத்தும் என கேன்சர் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார மையம் அறிவிக்க வேண்டும் என சில என்ஜிஓ அமைப்புகளும், விஞ்ஞானிகளும் கூறினர்.