சென்னை: அண்ணாமலை பல்கலைகழக ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை எனவே சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-11ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அப்போதைய துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2015ம் ஆண்டில் பல்கலைக்கழக துணைவேந்தராக மணியன் நியமிக்கப்பட்ட பிறகு ஊழல்கள் தலைவிரித்தாடியதாகவும், அப்போதைய பதிவாளர் ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் இந்த ஊழலுக்கு துணை நின்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.மேலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணினி புரோகிராமர்களாக பணியாற்றி வந்த 189 பேரும், ஆசிரியர் அல்லாத பணியில் இருந்த 30 பேரிடம் பேராசிரியராக மாற்றம் செய்ய தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10.95 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது.