புதுடெல்லி: ‘‘சிபிஐ ரெய்டு, கவர்னர் தலையீடு மூலம் தமிழக அரசுக்கு பிரதமர் மோடி நெருக்கடி கொடுத்து வருகிறார்’’ என டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் இடம் பெற்றிருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்–்கப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்ட, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என 2014 பொதுத் தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், மத்தியில் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்தாண்டு மத்திய பட்ஜெட்டிலும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படாததால் அதிருப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு, உடனடியாக சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினார். அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்ததை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் சில மாதங்களுக்கு முன் தெலுங்கு தேசம் விலகியது. அதோடு, பாஜ அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அளவில் புதிய கூட்டணி அமைக்கவும் சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில், டெல்லி வந்துள்ள சந்திரபாபு நாயுடுவை நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் நாயுடு சந்தித்துப் பேச உள்ளார். இதற்கிடையே, டெல்லியில் நேற்று மாலை பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் அதிமுக அரசை பிரதமர் மோடி ஆட்டி படைப்பதாக சரமாரியாக குற்றம்சாட்டினார். பேட்டியில் அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒட்டு மொத்த ஜனநாயகத்தையும் பாஜ அரசு அழித்து விட்டது. குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்கு ஆதரவான ஆளுநர்களை நியமித்து மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறது. இவற்றில் முக்கியமாக தமிழகம், புதுவை அடங்கும்.