திருமலை: திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்தின் 7வது நாள் இரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மகா தேரோட்டம் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று முன்தினம் காலை அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்பக விமானத்திலும், இரவு தங்க கஜ (யானை) வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று காலை 7 குதிரைகள் பூட்டிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்தார்.