புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு நடத்த, சிறப்புக் குழுவுக்கு கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதையடுத்து ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மேகாலயா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் சிறப்பு குழுவை அமைத்தது. இந்த குழு கடந்த மாதம் 23ம் தேதி ஆலையை ஆய்வு செய்தது. ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வாய் மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்தனர்.