சென்னை: மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு வந்துள்ள மணல் நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, ரூ.548 கோடி செலவில் 30 லட்சம் மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்ய பொதுப்பணித்துறை சார்பில் கடந்த மார்ச் 6ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் ‘செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ், நாலேஜ் இன்ப்ரா ஸ்ரெக்சர்ஸ் சிஸ்டம்ஸ், இனோ ரிதம் எனர்ஜி லிமிடெட்’ ஆகிய 3 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், ஹைதராபாத்தை சேர்ந்த இனோ ரிதம் எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், மலேசியாவின் பஹாங் மாநிலம் பீகான் துறைமுகத்தில் இருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணல் எம்.வி.அவ்ரலியா என்ற கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்திற்கு கடந்த 23ம் தேதி அதிகாலையில் வந்து சேர்ந்தது.