சென்னை: மாணிக்க வாசகர் குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியரை மிரட்டிய கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தரிடம் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. அப்போது சென்னைப் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறையின் மாணவரும் தமிழ் தேசிய மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கோபிநாதன் மற்றும் மாணவர்கள் சிலர் கூறியதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் பத்மாவதி, ‘‘மாணிக்க வாசகர் காலமும் கருத்தும்’’ என்ற தலைப்பில் கடந்த மே 17ம் தேதி ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ள செய்திகள் மீது சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையின் பேராசிரியர் நல்லூர் சரவணன் என்பவர் கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் பாஜ கட்சியை சேர்ந்த எச்.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மேற்கண்ட ஆய்வு நூலின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆய்வு நூலை வெளியிட்ட நல்லூர் சரவணனை மிரட்டுவது, பல்கலைக் கழகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யக் கோருவது மட்டும் அல்லாமல் மறைமுகமாக பேராசிரியரை மிரட்டும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர்.