ஓஎம்ஆரில் ஓடும் காரில் திடீர் தீ 3 பேர் உயிரை காப்பாற்றிய காவலர்

சென்னை: செம்மஞ்சேரி அருகே ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காருக்குள் சிக்கிய 3 பேரை கதவை உடைத்து போக்குவரத்து காவலர் பத்திரமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை மின்ட் பகுதியை சேர்ந்தவர் அரிதாஸ் (50). தனது மகன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி பத்திரிக்கை வைப்பதற்கு நேற்று முன்தினம் அரிதாஸ் தனது மனைவியுடன் காரில் மகாபலிபுரம், திருப்போரூர்  பகுதிகளில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு சென்றார். காரை டிரைவர் செல்வம் ஓட்டினார். பத்திரிக்கை வைத்துவிட்டு, ராஜிவ்காந்தி சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.

செம்மஞ்சேரி அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்த செல்வம் உடனே காரை ஓரமாக நிறுத்தினார். அதற்குள் கார் குபீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 3  பேரும் காரை திறந்து கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். இதை பார்த்த போக்குவரத்து காவலர் பிரகாஷ் விரைந்து வந்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து 3 பேரையும் எந்த காயமும் இல்லாமல்  பத்திரமாக மீட்டார். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் இருந்த செடி, கொடிகளை பிடுங்கி, தீயை முழுவதும் அணைத்தனர். அதற்குள் காரின் முன்பகுதி எரிந்து, சேதமடைந்தது. போக்குவரத்து காவலர் பிரகாஷ்  துரிதமாக செயல்பட்டு எரியும் காரில் இருந்து 3 பேரை காப்பாற்றிய செயலை, சக வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: