சென்னை: தமிழகத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு (மாணவிகளுக்கு மட்டுமானது) அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்பம் விற்பனை, ஜூலை 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. தரவரிசைப்பட்டியல் அடிப்படையில், கடந்த 17ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. முதல்நாளில் சிறப்புப்பிரிவு இடங்களுக்கும் கடந்த 2 நாட்களாக பொதுப்பிரிவு இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது. மொத்தமுள்ள 2 ஆயிரம் இடங்களுக்கு தரவரிசைப் பட்டியலில் முதல் 5 ஆயிரம் மாணவிகள் அழைக்கப்பட்டனர். 3 நாள் கலந்தாய்வின் முடிவில், 1,706 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 294 இடங்கள் 2ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும், 2ம் கட்ட கலந்தாய்வு தேதி www.tnhealth.org, www.tnmedicalselection.net ஆகிய இணைதளங்களில் வெளியிடப்படும் எனவும் மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.